வரலாற்றில் முதல்முறை.. 12 பேட்டர்களுடன் ஆடிய இலங்கை அணி... அதிர்ச்சியிலும் அதிர்ச்சி!
சாமீக குணசேகரா 110ஆவது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நவீத் ஜோர்டன் வீசிய பவுன்சர் பந்து, சமீகா ஹெல்மட்டில் பட்டது.

இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இப்போட்டியில், இலங்கை அணியின் 24 வயது அறிமுக வீரர் சாமீக குணசேகராவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து, இவருக்கு மாற்றாக மற்றொரு பேட்டரை, உடனே சேர்த்தார்கள்.
சாமீக குணசேகரா 110ஆவது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நவீத் ஜோர்டன் வீசிய பவுன்சர் பந்து, சமீகா ஹெல்மட்டில் பட்டது.
உடனே, மருத்துவர்கள் களத்திற்குள் விரைந்து, சாமீகவை சோதனை செய்தனர். அப்போது, சமீக நலாமாக இருப்பதாக கூறப்பட்டது.
இருப்பினும், மூன்று ஓவர்களுக்கு பிறகு, சாமீக தொடர்ந்து தலையை பிடித்துக் கொண்டே இருந்தார். இதனால், மீண்டும் மருத்துவர்கள் களத்திற்குள் சென்றபோது, தான் நலமாக இருப்பதாக சாமீக கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவ குழுவினர் நடுவர்களிடம் பேசினார். அதன்பிறகு, சாமீக குணசேகரனை பெவிலியனுக்கு அனுப்பினார்கள். மேலும், அவருக்கு மாற்றாக உடனே குஷன் ரஞ்சிதவை லெவன் அணியில் சேர்க்க, நடுவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
சாமீக 19 ரன்களை அடித்து நடையைக் கட்டிய நிலையில், ரஞ்சித 12ஆவது இட பேட்டராக அணியில் இடம்பெற்றார். இருப்பினும், இலங்கை அணி 439 ரன்களை குவித்ததால், ரஞ்சிதவை களமிறக்கவில்லை.
சாமீக இப்போது மட்டுமல்ல, அறிமுக ஒருநாள் போட்டியிலும், ஆட்டத்தின் நடுவே காயம் காரணமாக வெளியேறினா். 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது, முதல் ஓவரை வீசியப் பிறகு காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனே வெளியேறி இருந்தார். தற்போது, அறிமுக டெஸ்டிலும் காயம் காரணமாக விலகியுள்ளார்.
சாமீக குணசேகரனை தற்போது, மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அவருக்கு தலை பகுதியில் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நலமுடனை இருப்பதாகவும், இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில், முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 198 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்டிமல் ஆகியோர் சதம் அடித்து அசத்தியதால், இலங்கை அணி 439 ரன்களை குவித்தது.
ஆப்கானிஸ்தான் அணியில், ரஷித் கான் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஜோர்டன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை கைப்பற்றினார். மசூத் மற்றும் கைஸ் அகமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.