ஸ்ரேயாஸ் செய்த தியாகம்... வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம்... பஞ்சாப் அணி வென்றது எப்படி?
ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
முகமது சிராஜ், குஜராத் அணிக்காக தனது முதல் ஓவரை வீசினார். பிரப்சிம்ரன் மற்றும் பிரயன்ஸ் ஆர்யாவும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களத்தில் இறங்கினர். இரண்டாவது பந்திலேயே தனது அறிமுகப் போட்டியின் முதல் ரன்னை, பவுண்டரியைப் பறக்கவிட்டுத் தொடங்கினார் ஆர்யா.
அடுத்து, ஒரு பவுண்டரி வாங்கினாலும், 8 ரன்களுடன் முதல் ஓவரை முடித்தார் சிராஜ். அடுத்து வந்த ரபாடா, ஆர்யாவின் விக்கெட்டைக் குறிவைக்க, அர்ஷத் கான், ரஷீத் கான் ஆகிய இருவரும் எளிதான பிடியெடுப்பு வாய்ப்பைத் தவறவிட்டனர்.
இதைப் பயன்படுத்திய ஆர்யா, சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு ஃபோர் என வெளுத்துவிட்டார். ஆனால் அடுத்த ஓவரில் பிரப்சிம்ரனின் 5(8) விக்கெட்டை வீழ்த்தி ரபாடா கம்பேக் கொடுத்தார் .
இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், அருமையான பவுண்டரியுடன் பஞ்சாபின் புதிய கேப்டனாக ரன் கணக்கைத் தொடங்கினார். அர்ஷத் கான், ஐந்தாவது ஓவரை வீச வந்தபோது, '4, 4, 6, 4' என விளாசினார் ஆர்யா. பவர்பிளே முடிவில், 73/1 என்ற வலுவான நிலையில் இருந்தது பஞ்சாப்.
இதையடுத்து சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கையில் பந்து வந்தது. முதல் பந்தில் பவுண்டரி கொடுத்தாலும், அதே ஓவரில் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்தி முடிவுக்குக் கொண்டுவந்தார். முதல் போட்டியிலேயே அரைசதத்தை நெருங்கிய ஆர்யா 47 (23), ரஷீதின் கூக்லியைக் கணிக்கத் தவறி லீடிங் எட்ஜ் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அடுத்து அந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன. அடுத்த ஓவரைச் வீசிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர், 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ரன் ரேட்டினை கட்டுப்படுத்தினார். 10 ஓவர்கள் முடிவில், அணியின் ஸ்கோர் 104/2 என்ற நிலைக்கு வந்தது.
இதையடுத்து, ஓமர்சாய் 16 (15), மேக்ஸ்வெல் 0 (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி, பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாகப் பறக்கவிட்டார் சாய் கிஷோர். இதன்மூலம், ரோஹித் சர்மாவின் (18 முறை) அதிக முறை டக் அவுட்டான மோசமான சாதனையை, கோல்டன் டக் மூலம் மேக்ஸ்வெல் (19 முறை) முறியடித்தார்.
12வது ஓவரை வீசிய ரஷீத் கானும் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். வேகமாக ஏறிய ரன் ரேட், குறையத் தொடங்கியது. ஆனால், அடுத்து வீச வந்த சாய் கிஷோர் மற்றும் ரஷீத் கான் ஆகியோரின் சுழலையும் இரண்டு, இரண்டு சிக்ஸர்களாக மாற்றி ட்ரில் எடுத்தார் ஸ்ரேயாஸ்.
ரன் ரேட் மீண்டும் ஏறுமுகமாக மாற, 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார் கேப்டன் ஸ்ரேயாஸ். சிராஜின் அடுத்த ஓவரில் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் ஸ்டாய்னிஸ். இதன்மூலம், 15 ஓவர்கள் முடிவில் 156/4 என்ற நிலை உருவானது.
தனது கடைசி ஓவரை வீச வந்த சாய் கிஷோர், ஸ்டானிஸின் விக்கெட்டை 20 (15) ரன்களில் வீழ்த்தினார். அடுத்து வந்த பிரசித் கிருஷ்ணாவின் ஓவரை 6, 4, 6, 6 என மீண்டும் வெளுத்து வாங்கினார் ஸ்ரேயாஸ். ஷஷாங்க் சிங், ரஷீத் கானின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு ஃபோர் என பந்தைப் பதம் பார்த்தார்.
சிராஜ் வீசிய இறுதி ஓவரில் 5 பவுண்டரிகளை விரட்டி, பினிஷ் கொடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 97 (42), ஷஷாங்க் சிங் 44 (16) இறுதிவரை களத்தில் நின்ற ஜோடி, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 243 ரன்களைச் சேர்த்தனர்.
244 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியின் சாய் கிஷோர் - கில் ஜோடியில், அர்ஷ்தீப் சிங்கின் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார் சாய் சுதர்ஷன். ஆனால், அர்ஷ்தீப் அதன் பின்னர் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸர் போனாலும், மூன்று ஓவர்கள் முடிவில் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். இந்த நிலையில், இரண்டு சிக்ஸர்கள், ஒரு ஃபோர் என ஓமர்சாயின் பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே தள்ளி, ஆட்டத்தின் போக்கை டி20 மோடுக்கு மாற்றினார் கில்.
ஜான்சனின் ஐந்தாவது ஓவரையும் ஆளுக்கு ஒரு சிக்ஸர் போட்டு பிரித்து மேய்ந்தனர். இந்நிலையில், பவர்ப்ளேயின் கடைசி ஓவரை சுழலுக்கு மாற்றி சோதனை செய்தார் ஸ்ரேயாஸ். மேக்ஸ்வெல் பந்தில் இறங்கி ஆட நினைத்த கில் 33(14) ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால், 6 ஓவர்கள் முடிவில் 61-1 என்ற நிலையை அடைந்தது குஜராத் அணி.
பத்து ஓவர்கள் முடிவில் 104-1 என்ற நிலையை எட்ட, ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலை குஜராத்துக்கு உருவானது.11ஆவது ஓவரை மேக்ஸ்வெல் வீச, சுதர்ஷனின் எளிதான கேட்சைத் தவறவிட்டார் ஸ்ரேயாஸ். இதைப் பயன்படுத்திய சுதர்ஷன் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 17 ரன்களைச் சேர்த்தார்.
அடுத்த ஓவரில் சஹால் பந்துவீச்சில் 4, 6, 4கொடுக்கப்பட்டு, மேலும் 17 ரன்கள் சேர்க்கப்பட்டன. சுழலை மாற்றி, அர்ஷ்தீப் சிங்குக்கு பந்தைக் கொடுத்தார் ஸ்ரேயாஸ். சுதர்ஷனின் விக்கெட்டை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். 41 பந்துகளில் 74 ரன்களைச் சேர்த்த அவரது அருமையான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, இம்பேக்ட் பிளேயராக களத்துக்கு வந்த ரதர்ஃபோர்டு, இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட14 ஓவர்கள் முடிவில் 169-2 என்ற நிலையில், இறுதி 36 பந்துகளில் 75 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற 60-40 நிலையில் இருந்தது.
"இம்பேக்ட்" பிளேயராக இறங்கிய வைசாக், 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அழுத்தத்தை அதிகரித்தார். யான்சனின் அடுத்த ஓவரிலும் 8 ரன்களே சேர, 24 பந்துகளில் 62 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அடுத்த ஓவரை வீச வந்த வைஸாக், மூன்று வைடுகள், நான்கு டாட்கள் என 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
அடுத்த ஓவரை வீச வந்த யான்சன் 12 ரன்கள் கொடுத்தாலும், பட்லரை போல்டு எடுத்து வெளியேற்றினார். 12 பந்துகளில் 45 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. பின்னல் வைட் லெந்தில் பந்துகளை வைஸாக் இறக்க, இம்முறை 18 ரன்கள் சென்றன.
கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், அர்ஷ்தீப் சிங் வீச, முதல் பந்தில் திவாடியா 6(2) ரன் அவுட் ஆனார். அடுத்த பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டாலும், அதைத் தொடர்ந்து வந்த யார்க்கரில் ஸ்டம்ப் பறக்க, ரதர்ஃபோர்டு 46(28) பெவிலியனுக்கு திரும்பினார்.
இறுதிப் பந்தில் ஷாருக் கான் சிக்ஸர் பறக்கவிட்டாலும், 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்து உள்ளது.