ஷ்ரேயாஸ் ஐயருக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ... ரோகித், கோலிக்கு ஷாக்?

ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணி வீரர்களை ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என பிரித்து சம்பளம் வழங்கி வருகிறது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ... ரோகித், கோலிக்கு ஷாக்?

ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணி வீரர்களை ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என பிரித்து சம்பளம் வழங்கி வருகிறது.

வீரர்களின் அனுபவம், அவர்களின் செயல்திறனை வைத்து சம்பளம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டில், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டனர். 

பிசிசிஐ உத்தரவுக்கு அமைய இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாததால் நீக்கப்பட்ட நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து நல்ல ஃபார்மில் விளையாடி வருகின்றார்.

அத்துடன், தேசிய அணியிலும் மீண்டும் இடம் பிடித்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தார்.

ஆகவே ஷ்ரேயாஸ் ஐயர் 2025 ஆம் ஆண்டின் மத்திய ஒப்பந்தத்தில் திரும்புகிறார் என்பது உறுதியாகிவிட்டது.  பிசிசிஐ விதிமுறைகளின்படி, இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும். 

அதாவது, ஒரு வருடத்தில் 3 டெஸ்ட், 8 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் ஏதேனும் ஒரு ஃபார்மெட்டில் விளையாட வேண்டும். கடந்த ஒரு வருடத்தில் ஷ்ரேயாஸ் தேசிய அணிக்காக 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

எனவே, அவர் ஒப்பந்தத்தில் வைக்கப்படுவார். இருப்பினும், 2024 இல் நீக்கப்படுவதற்கு முன்பு அவர் கிரேடு பி-யில் இருந்தார். இந்த முறையும் அவருக்கு அதே கிரேடு கொடுக்கப்படுமா? என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

அத்துடன், விராட்-ரோஹித் எந்த கிரேடில் வைக்கப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இதுவரை கிரேடு ஏ பிளஸில் இருந்தனர். 

ஆனால் டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு விராட், ரோஹித் மற்றும் ஜடேஜா மூவரும் டி20 வடிவத்தை விட்டுவிட்டனர். அவர்கள் மூவரும் இப்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள். 

எனவே அவர்கள் எந்த குழுவில் வைக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை. சிலவேளைகளில் அவர்களின் தரம் குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.