மெகா சொதப்பல்... இந்திய அணியை குழிக்குள் தள்ளும் கம்பீர்... கதறும் ரசிகர்கள்!
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவை நியமித்து இருக்கிறார் கம்பீர்.
கவுதம் கம்பீர் தலைமையில் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த நிலையில், அணி தேர்வில் இந்திய அணியின் எதிர்கால கேப்டன் யார் என்ற முடிவை கவுதம் கம்பீர் எடுத்து இருக்கிறார். அவரது தீர்மானம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
யாரும் எதிர்பார்க்காத ஒரு வீரரை ஒருநாள் அணி மற்றும் டி20 அணி ஆகியவற்றின் துணை கேப்டனாக நியமித்து அவர்தான் எதிர்கால இந்திய அணியின் கேப்டன் என மறைமுகமாக உணர்த்தி இருக்கிறார்.
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவை நியமித்து இருக்கிறார் கம்பீர்.
அவர் 2026 டி20 உலகக் கோப்பை வரை இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக அடுத்த ஓராண்டுக்கு ரோஹித் சர்மா மீண்டும் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்.
எனவே, 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் தான் விளையாட உள்ளது.
கேப்டன்கள் தேர்வில் பிரச்சினை இல்லாவிட்டாலும், இரண்டு அணிகளின் துணை கேப்டன் யார் என்பதில்தான் பிரச்சனை.
இலங்கையை அணிக்கு எதிரான டி20 அணி மற்றும் ஒரு நாள் அணிகளின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில்,. அவர்தான் இந்திய அணியின் வருங்கால கேப்டன் என்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டன் ஆனால் அணியை யாராலும் காப்பாற்ற முடியாது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அவர் ஒருநாள் அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், டி20 அணியில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. அவரை விட ருதுராஜ் கெய்க்வாட் டி20 போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் ஆடி வருகின்றார்.
ஆனால், டி20 அணியில் மாற்று வீரராகக் கூட ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
டி20 போட்டிகளில் நிதானமாக ஆடி வரும் சுப்மன் கில் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
அத்துடன், இந்திய டி20 அணியின் எதிர்கால கேப்டன்களில் ஒருவராக இருப்பார்கள் என கூறப்பட்ட ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரின் டி20 எதிர்காலம் என்ற என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், ஒரு நாள் அணியில் அடுத்த இந்திய அணியின் கேப்டனாக கே எல் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் துணை கேப்டன் பதவி வழங்கப்படவில்லை.
அந்த அணியிலும் சுப்மன் கில்லே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளதுடன், அவரது கேப்டன்சி குறித்து விமர்சனம் உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்ட போது பவுலர்களை பயன்படுத்துவதில் தொடர்ந்து சொதப்பி வந்தார்.
நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும் கேப்டனாக இருந்த சுப்மன் கில் பவுலர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அது மட்டும் இன்றி, அவர் அணியில் சுயநலமாக செயல்படுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் நான்கு துவக்க வீரர்கள் அணியில் இடம் பெற்ற நிலையில், தனது இடத்தை விட்டுக் கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக் கொண்டு, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மாவை அவர்களது பேட்டிங் வரிசையில் இருந்து மாற்றி பேட்டிங் செய்ய வைத்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் இருவரும் சுப்மன் கில்லை விட அதிக ஸ்ட்ரைட்டில் பேட்டிங் ஆடி வந்தார்கள். அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் வீரர்களை துவக்கம் அளிக்க வைத்து இருக்க வேண்டும்.
அதன் மூலம், பவர்பிளே ஓவர்களில் அதிக ரன் குவிக்கலாம். ஆனால், கேப்டன் சுப்மன் கில் அதை செய்யவில்லை. இது போன்ற காரணங்களால் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட சரியான நபரா என்ற கேள்வி காணப்படுகின்றது.
எனினும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவே நீடிப்பார். அதே போல, 2026 டி20 உலகக் கோப்பை வரை சூர்ய குமார் யாதவே இந்திய டி20 அணியின் கேப்டனாக நீடிப்பார்.
எனவே, இந்த இரண்டு ஆண்டு காலகட்டத்திற்குள் சுப்மன் கில்லுக்கு மாற்றாக வேறு வீரரை கேப்டனாக்க கவுதம் கம்பீர் முடிவு செய்யவும் வாய்ப்பு இருக்கின்றது.