இன்னும் 77 ரன்கள்.. சாதனை படைக்கப் போகும் விராட் கோலி!
விராட் கோலி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என்று 3 வடிவங்களையும் இணைந்து 25,923 ரன்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 77 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதுவரை இந்திய அணி ஆடியுள்ள 3 போட்டிகளில் மூன்றிலும் வென்று அசத்தியுள்ளது.
அதேபோல் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர்.
குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உட்பட 156 ரன்களை விளாசி இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பிரஷரான சூழலில் களமிறங்கிய 85 ரன்களும், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 55 ரன்களும் விளாசினார்.
ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரி விளாச அவசரப்பட்டு 16 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் விராட் கோலி அபாரமான ஃபார்மில் இருக்கிறார்.
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 35 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி முக்கியமான சாதனை ஒன்றை படைக்க முடியும்.
தற்போது விராட் கோலி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என்று 3 வடிவங்களையும் இணைந்து 25,923 ரன்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.
இவருக்கு முன் இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தன 25,957 ரன்களுடன் 4வது இடத்தில் இருக்கிறார். இந்த போட்டியில் 35 ரன்கள் எடுத்தால், ஜெயவர்தன சாதனையை முறியடிக்க முடியும்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கரும், இரண்டாவது இடத்தில் சங்கக்காராவும், 3வது இடத்தில் ரிக்கி பாண்டிங்கும் உள்ளனர்.
அதேபோல் 77 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26 ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலியால் படைக்க முடியும். இதனால் விராட் கோலி ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.